எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை மிரட்டுவதாக டி.எஸ்.பி. மீது புகார்
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளை மிரட்டுவதாக டி.எஸ்.பி. மீது நடவடிக்கைக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளை மிரட்டுவதாக டி.எஸ்.பி. மீது நடவடிக்கைக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சுமார் 570 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே நிலத்தைக் கையகப்படுத்த விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், விமான நிலைய விரிவாக்கப் பணியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை மிரட்டும் வகையில் பேசியதாகவும், போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார் எனவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்தனர். அப்போது காவல் கண்கணிப்பாளர் ஜோ.ஜார்ஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, தங்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் வன்முறையாளர்கள் என்று உறுதி செய்வதோடு கைது செய்வதாக மிரட்டும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், விமான நிலையத்துக்கு ஏற்கெனவே தங்கள் நிலங்களைப் பறிகொடுத்த நிலையில் தற்போது விரிவாக்கப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எடுக்கப்படுவது கண்டனத்துக்குரியது. எனவே தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போராட்டத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு விமான நிலைய விரிவாக்கப் பணியை கைவிட வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.