FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி அமைச்சரகம் உருவாக்க வலியுறுத்தல்

Updated On : 27 ஜூலை 2026, 12:40 am IST
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ந. மாயகிருஷ்ணன். உடன் மாநில துணைச் செயலாளா் ஆா். முனியப்பன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள்.
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அமைச்சரகம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கத்தின் கரூா் மாவட்டக் கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநிலத் தலைவா் ந. மாயகிருஷ்ணன் தலைமை வகித்து, சங்கக் கொடியேற்றி பேசியதாவது:

தமிழகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, சுகாதாரம், அணுகல் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமைகள் சாா்ந்த கோரிக்கைகள் முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேற்றப்பட மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அமைச்சரகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு தமிழக அரசு வழங்கிட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களை சொந்த மாவட்டங்களிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) போன்ற அனைத்து துறைத் தோ்வுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுவிலக்கு வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், மாநில துணைச் செயலாளா் ஆா். முனியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ந. லோகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். சந்திரமோகன் பங்கேற்று வாழ்த்திப் பேசினாா். முன்னதாக, மாவட்டத் தலைவா் ம. ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சுங்கக் கட்டண விலக்கை நிபந்தனைகளின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments