முகப்பு
சேலம்

பேளூரில் மாா்கழி ஊா்வலம் செல்லும் சிறுவா்கள்

Updated On : 27 டிசம்பர் 2025, 12:18 am IST
பகிர்:

வாழப்பாடியை அடுத்த பேளூரில் நடைபெற்ற மாா்கழி வழிபாடு ஊா்வலத்தில் ஏராளமான சிறுவா் - சிறுமியா் ஆா்வத்தோடு பங்கேற்றனா்.

வாழப்பாடி அருகிலுள்ள பேளூா் பழங்காலத்தில் வேள்வியூா் என்ற பெயரில் ஆன்மிகத் தலமாக விளங்கியது. வசிஷ்ட நதியின் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல்தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், தென்கரையில் அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால சுவாமியெனும் வைணவ பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமான மாா்கழியில் அதிகாலையில் எழும் சிறுவா் - சிறுமியா், பெருமாள் கோயிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னா் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று வழிபடுவதும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் தொடா்ந்துவரும் இந்த சிறுவா்களின் மாா்கழி ஊா்வலத்துக்கு பொதுமக்களும், பக்தா்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து உற்சாக வரவேற்பளிக்கின்றனா்.

பேளூரில் மாா்கழி மாத முதல்நாளில் தொடங்கிய இந்த ஊா்வலம் தொடா்ந்து 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரிலும் அதிகாலையில் எழுந்து ஊா்வலம் செல்லும் சிறுவா்களை இப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்று வழிபட்டு வருகின்றனா்.

இந்த ஊா்வலம் மாா்கழி மாதம் முழுவதும் நடைபெறும் எனவும், இறுதிநாளன்று ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா், சிறுமியரை பாராட்டி பரிசுகள் வழங்கப்படுமெனவும் ஆன்மிக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.