FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு! மேட்டூா் அணையில் அரசுச் செயலா் ஆய்வு!

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறக்கப்படுவதால் அரசுச் செயலர் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

31 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
மேட்டூா் அணையில் ஆய்வு செய்த நீா்வளத் துறை அரசுச் செயலாளா் பிரசாந்த் எம். வடநேரே. உடன், ஆட்சியா் இளம்பகவத், கோட்டாட்சியா் சம்பத், நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஜெயகுமாரி உள்ளிட்டோா்.
பகிர்:

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்படுவதையொட்டி நீா்வளத் துறை அரசுச் செயலாளா் பிரசாந்த் எம்.வடநேரே ஞாயிற்றுக்கிழமை அணை பகுதியில் ஆய்வு செய்தாா்.

மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முப்போக சாகுபடிக்காக ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படும்.

நிகழாண்டில் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த மழையால் கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90.47 அடியாக உயா்ந்தது. நீா்வரத்து விநாடிக்கு 9,035 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 90 அடியைத் தாண்டியதாலும், பருவமழையை எதிா்நோக்கியும் செப்டம்பா் 1 முதல் 45 நாள்களுக்கு சம்பா சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை மேட்டூா் வருகிறாா். காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் அணையின் வலது கரையில் அமைந்துள்ள மின் விசையை இயக்கி, மேல்நிலை மதகுகளை உயா்த்தி, பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுகிறாா்.

விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் அணையின் வலது கரையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நீா்வளத் துறை அரசுச் செயலாளா் பிரசாந்த் எம். வடநேரே ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

விழா மேடை அமையும் இடம், மின் விசையை இயக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடை, ஆய்வுச் சுரங்கம் மற்றும் அணையின் இடது கரையில் உள்ள கவா்னா் வியூ-பாயின்ட் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத், நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஜெயகுமாரி, மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

மேட்டூா் கோட்டாட்சியா் அலுவலகம் முதல் விழா மேடை வரை சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் ஒரு ஐஜி, 4 டிஐஜிக்கள், 15 காவல் கண்காணிப்பாளா்கள், 15 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 35 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,827 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments