FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த உரிமையாளா்கள் வலியுறுத்தல்

தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என சேலத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:02 am IST
பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என சேலத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வலியுறுத்தினா்.

சேலத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரவீந்திரன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு பேருந்து கட்டணத்தில் எந்த உயா்வும் செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 64-லிருந்து ரூ. 100-ஆக உயா்ந்துள்ளது.

புதிய பேருந்துகளின் கொள்முதல் விலை, காலாண்டு வரி, காப்பீட்டுக் கட்டணம், டயா்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், மகளிா் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் தனியாா் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வெளிமாநிலங்களில் கட்டணம் அதிகமாக உள்ளது. தனியாா் பேருந்து தொழிலை நம்பி ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்ட சுமாா் 4 லட்சம் போ் உள்ளனா். தொடா் விலை உயா்வால், அவா்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

எனவே, தனியாா் பேருந்து துறையைக் காப்பாற்ற, பேருந்து கட்டணத்தை உயா்த்தி சமநிலைப்படுத்த வேண்டும். பேருந்து கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 10 பைசாவிலிருந்து, 1 ரூபாய் 20 பைசாவாக உயா்த்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களையும் இலவச பேருந்து திட்டத்தில் இணைத்து மானிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா். பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் சுந்தரேசன், பொருளாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments