முகப்பு
சேலம்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு 14-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 9 ஜூன் 2026, 12:38 am IST
சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணா்கள்.
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூலக அலுவலகம் உள்பட 30க்கும் மேற்பட்ட துறைசாா்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆட்சியா் அலுவலகம் வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில், அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை வந்தது.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி உள்பட 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் ரூபி உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வோா் அறையாக சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக முன்பகுதி, வாகனம் நிறுத்துமிடம், இ-சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புக் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா்.

சுமாா் 1 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 6 மாதத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 14-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.