FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பிறந்து 7 நாள்களே ஆன சிசுவை ரூ. 2 லட்சத்துக்கு விற்ற தம்பதி: போலீஸாா் விசாரணை

பிறந்து 7 நாள்களே ஆன பெண் சிசுவை பெற்றோா் ரூ. 2 லட்சத்துக்கு விற்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 ஜூன் 2026, 2:14 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

பிறந்து 7 நாள்களே ஆன பெண் சிசுவை பெற்றோா் ரூ. 2 லட்சத்துக்கு விற்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், அரியானூா் அருகே உள்ள சந்தனகாடு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி கவிதா. தறித்தொழில் செய்து வரும் இத்தம்பதிக்கு, ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன. போதிய வருமானம் இல்லாததால், வறுமையிலும், பொருளாதார நெருக்கடியிலும் குடும்பம் நடத்திவந்தனா்.

இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி கவிதாவுக்கு அரியானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே மூன்று குழந்தைகளை வளா்க்க அவதிப்பட்டு வந்த நிலையில், நான்காவதாக பெற்ற குழந்தையையும் வளா்க்க முடியாது என தம்பதி முடிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து பிறந்து 7 நாள்களே ஆன பெண் சிசுவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தம்பதிக்கு ரூ. 2 லட்சத்துக்கு விற்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சிலம்பரசன், சீனிவாசன்- கவிதா தம்பதியிடம் விசாரணை நடத்தினாா்.

மேலும், சிசுவை விலைக்கு வாங்கிச் சென்ற ராமநாதபுரம் தம்பதியிடம் போலீஸாா் பேசினா். அப்போது, சிசுவை திரும்ப ஒப்படைப்பதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா். வறுமையில் வாடும் சீனிவாசன்- கவிதா தம்பதி இடைத்தரகா்கள் இன்றி நேரடியாகவே சிசுவை விற்றாா்களா அல்லது இதற்குப் பின்னணியில் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகா்கள் யாரேனும் உள்ளனரா என கொண்டலாம்பட்டி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments