முகப்பு
மதுரை

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

Updated On : 9 ஜூன் 2026, 3:09 am IST
உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

அரசியல் தலையீடின்றி அரசு வழக்குரைஞா்களை நியமிக்கக் கோரிய முறையீட்டை வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் முன்வைத்த முறையீடு:

தமிழகத்தில் கடந்த மாதம் புதிய அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞா்களாகப் பணியாற்றியவா்கள் பதவி விலகினா். தற்போது, உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் நடைபெறுகிறது. அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

ஆனால், தற்போது நடைபெறும் அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஓா் அரசியல் கட்சி, எந்தெந்த நீதிமன்றங்களில் யாரை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அந்தக் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. இந்த நடைமுறை சட்ட விரோதமானது. எனவே, இந்த விவகாரத்தை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவா் முறையிட்டாா்.

இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனா்.