ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வருவோரிடம் நூதன மோசடி: இளைஞர் கைது
வத்தலகுண்டு பகுதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வருவோரிடம் நூதன பண மோசடியில் ஈடுபட்டவரை, பொதுமக்கள் பிடித்து காவல்
வத்தலகுண்டு பகுதி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வருவோரிடம் நூதன பண மோசடியில் ஈடுபட்டவரை, பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து அவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள மேலக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கலா. இவர், வத்தலகுண்டு- மதுரை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன் பணம் எடுக்க வந்தார். அப்போது, அவருக்கு உதவி செய்வதாகக் கூறிய இளைஞரிடம் ரூ.20ஆயிரம் பணம் எடுக்க வேண்டும் என தெரிவித்தாராம். அப்போது அந்த இளைஞர், பணம் வரவில்லை எனக் கூறி கலாவை அனுப்பியுள்ளார். இதனிடையே பழுதான கலாவின் செல்லிடப்பேசி செவ்வாய்க்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் ரூ.20ஆயிரம் பணம் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்துள்ளது. அதுகுறித்து விவரம் தெரியாத கலா, வங்கிக்கு நேரடியாக விசாரிக்க சென்றுள்ளார். குறுந்தகவலை பார்த்த வங்கி அலுவலர்கள், ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கலா, தனக்கு உதவி செய்வதாக வந்த அந்த இளைஞர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்ததன் பேரில், ஏடிஎம் மைய காமிராவில் பதிவான காட்சிகளை வங்கி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதே நேரத்தில், முதியவர் ஒருவருக்கு உதவி செய்வதாகக் கூறி உடன் வந்த அந்த இளைஞரைப் பார்த்த வங்கிக் காவலாளி, கலாவிடம் விசாரித்தபோது, அந்த நபர் தான் தன்னை ஏமாற்றியவர் என்பதை அடையாளம் காட்டினார். இதனை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், அந்த இளைஞரைப் பிடித்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ் (37) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதன்கிழமை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.