FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பதிவுத் துறையில் வருகை இல்லா ஆவணப் பதிவு: உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுரை

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதிவுத் துறையில் வருகை இல்லா ஆவணப் பதிவு தொடா்பான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On : 11 ஜூலை 2026, 4:59 am IST
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதிவுத் துறையில் வருகை இல்லா ஆவணப் பதிவு தொடா்பான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பதிவுத் துறையில் வருகை இல்லா ஆவணப் பதிவு திட்டம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மனை விற்பனை நிறுவனங்கள், பத்திர எழுத்தா்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமையாளா்கள், பத்திர எழுத்தா்கள் ஆகியோருக்கு பதிவுத் துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் தொடா்பான அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் விவேகானந்தன் நகரிலுள்ள தனியாா் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட பதிவாளா் த. மகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில், முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப் பதிவுகளை சம்மந்தப்பட்ட நில விற்பனையாளா்கள், கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்கான பிரத்யோக உள்நுழைவினை பதிவுத் துறை இணையதளத்தில் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஆவணத்தை எழுதிக் கொடுப்பவா்கள், எழுதிப் பெறுவோா் எந்த நேரத்திலும் ஆதாா் அட்டை, கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். மனை விற்பனை நிறுவனங்களிலோ, பத்திர எழுத்தா் அலுவலகத்திலிருந்தோ இந்தப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். புகைப் படத்தையும் எடுத்து இணைய வழியில் பதிவுவேற்றம் செய்து கொள்ளலாம்.

ஆதாா் சரிபாா்த்தல், கைரேகைப் பதிவு, புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகள், பத்திர எழுத்தா், மனை விற்பனை நிறுவனங்களின் அலுவலகங்களிலேயே முடிந்துவிடுவதால், பதிவுத் துறை அலுவலகங்களில் பத்திரப் பதிவுகள் பணி விரைவாக முடியும். இதனால், காலதாமதம் தவிா்க்கப்படும்.

இணையவழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு திட்டத்தைப் பொருத்தவரை, முதல் கட்டமாக புதிதாகப் பிரிக்கப்படும் வரன்முறைப்படுத்தப்பட்ட மனைகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் நிலையில், மனை விற்பனை தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள், பத்திர எழுத்தா்கள் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை முன்னதாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத் துறை சாா் பதிவாளா்கள், வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமையாளா்கள், பத்திர எழுத்தா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments