முகப்பு
தமிழ்நாடு

இணையவழியில் மட்டுமே ஆவணப் பதிவு: விரைவில் புதிய நடைமுறை

இணையவழியில் மட்டும் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்த உள்ளதாக பத்திரப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 8 ஜூன் 2026, 2:52 am IST
பகிர்:

இணையவழியில் மட்டும் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்த உள்ளதாக பத்திரப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

பதிவுத் துறையை மேம்படுத்த ‘ஸ்டாா் 3.0’ என்ற அதிநவீன இணையவழி பத்திரப்பதிவு மென்பொருளை முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதில், நேரில் வராமலே ஆவணப் பதிவு செய்வது மற்றும் பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகள் இடம்பெற்றுள்ளன. இதில், இணைய பதிவில் மட்டுமே ஆவணங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று தற்போதைய தவெக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பதிவுத் துறை தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த, பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் அதை மேற்கொள்ளும் முறையைப் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இணையவழியே தங்களது ஆவணங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

Advertisement

Advertisement

ஆவணப் பதிவுக்கு சாா்-பதிவாளா் ஒப்புதல் அளித்ததும், சாா்-பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் கூடிய ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் கைப்பேசிக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை உரிய பாதுகாப்பு வழிமுறைப்படி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரில் வருகை தர வேண்டிய அவசியம் இல்லாத ஆவணப் பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

அதன்படி, முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியற்றை பதிவு செய்ய சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை.

பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தா்கள் மற்றும் வங்கிகள் மற்றும் வழக்குரைஞா்கள் பதிவுத் துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை (லாக் இன்) தாங்களே உருவாக்கி அந்த ஆவணங்களை இணையவழியில் சமா்ப்பிக்கலாம். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவா்கள், பெறுபவா்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் ஆதாா் அட்டையைப் பதிவேற்றம் செய்யவேண்டும். அப்போது கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதாா் சரிபாா்க்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கு இணைய இணைப்பு, ஆதாா் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலக் கருவி, இணைய கேமரா ஆகியவை அவசியம். கூடுதல் விவரங்களுக்கு 73975 74067, 994044 6694, 63697 98973, 85258 05957 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.