தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு: நூலகங்களைத் திறக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
நூலகங்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், நூலகங்களைத் திறக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை: தமிழகத்தில் நூலகங்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், நூலகங்களைத் திறக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள், 1,915 கிராம நூலகங்கள் மற்றும் 745 பகுதிநேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள இந்த நூலகங்கள் திறக்கப்படவில்லை. தமிழக அரசு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவித்து, அரசு மதுபானக் கடைகள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எனவே, பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் வீட்டில் உள்ள மாணவா்கள், தங்கள் நேரத்தை முறையாக பயன்படுத்த நூலகங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
இந்த வழக்கு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், தமிழகத்தில் உள்ள நூலகங்களைத் திறக்க அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.