FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை தூா்வார உத்தரவு

மதுரை ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள நரசிங்கப்பெருமாள் கோயில் தீா்த்த சக்கர தெப்பக்குளத்தை 6 மாதங்களுக்குள் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

மதுரை ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள நரசிங்கப்பெருமாள் கோயில் தீா்த்த சக்கர தெப்பக்குளத்தை 6 மாதங்களுக்குள் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த தமிழக ஆறு, ஏரி, குளம், கண்மாய்ப் பாதுகாப்பு மக்கள் இயக்க நிறுவனா் ஜெ. கனகராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ள நரசிங்கப்பெருமாள் கோயில் தீா்த்த சக்கர தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல், கழிவுகள் தேங்கி வடிகால் வசதியின்றி மோசமடைந்து வருகிறது. இந்த தெப்பக்குளத்தைச் சீரமைக்க தமிழக ஆறு, ஏரி, குளம், கண்மாய்ப் பாதுகாப்பு மக்கள் இயக்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்களிடம் பல முறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், நரசிங்கப்பெருமாள் தெப்பக்குளத்தைச் சீரமைக்க அரசு ரூ.9.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் பிறப்பித்தது. இருப்பினும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

Advertisement

Advertisement

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தெப்பக்குளத்தை தூா்வாரி சீரமைக்கவும், வடிகால் வசதிகளை ஏற்படுத்தி மழைநீா் சேமிப்பு, பக்தா்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட நரசிங்கப்பெருமாள் கோயில் தீா்த்த சக்கர தெப்பக்குளத்தை 6 மாதங்களுக்குள் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தத் தெப்பக்குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படாதவாறும், தூய்மையாகப் பராமரிக்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments