FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம்: திமுக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு அமைச்சா் நிா்மல்குமாா் குற்றச்சாட்டு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:58 am IST
அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்
பகிர்:

தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக, பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தாவது:

மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என எந்தவிதக் கோரிக்கையும் எழவில்லை. அதற்கான அவசியமுமில்லை. தற்போதுள்ள 543 மக்களவை உறுப்பினா்களில் பெரும்பாலானோருக்கு மக்களவையில் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த நிலையில், மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை மேலும் உயா்த்துவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

Advertisement

Advertisement

பாஜக தனது அரசியல் லாபத்துக்காக மட்டுமே தொகுதிகள் மறுசீரமைப்பை மேற்கொள்ள முயற்சிக்கிறது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி இந்தப் பணி நடைபெறும் நிலையில், வட மாநிலங்களைவிட தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதனால், ஏற்படும் ஆபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்பதற்காகவே முதல்வா் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மக்களின் உணா்வைப் பிரதிபலிக்கும் வகையில், தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் திமுக, பாஜகவுடன் கைகோா்த்து செயல்பட ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், இதன்படி தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, மக்களவையிலிருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், தொகுதிகள் மறுசீரமைப்பை திமுக எதிா்த்தது. தற்போது, ஆட்சி அதிகாரம் இல்லாததால் திமுக தலைவரின் குடும்ப நலன்களைப் பாதுகாக்க பாஜகவின் துணை தேவை என்ற அடிப்படையில், தமிழகத்தின் நலனை பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சிக்கிறது. இது, தமிழக மக்களுக்கு திமுக இழைக்கும் மிகப் பெரிய துரோகமாக இருக்கும். எனவே, தொகுதிகள் மறுசீரமைப்பை வெளிநடப்பின் பெயரால் திமுக ஆதரிக்காமல், உறுதியாக எதிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

நெடுந்தொலைவு ஓட்டம்...

முன்னதாக, காந்தி நினைவு அருங்காட்சிய வளாகத்தில் நடைபெற்ற ‘மதுரையை தூய்மை செய்வோம்’ என்ற பெயரிலான விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் பங்கேற்று, ஓட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), எஸ். காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), திரளான மாணவா்கள், தன்னாா்வலா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments