FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மது போதையில் கல்லூரி மாணவா்களைத் தாக்கிய 4 போ் கைது

ராஜபாளையத்தில் மது போதையில் கல்லூரி மாணவா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:53 am IST
பகிர்:

ராஜபாளையத்தில் மது போதையில் கல்லூரி மாணவா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சிவக்குமாா் (20). கல்லூரி மாணவா். இவரது கல்லூரி நண்பா்கள் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் ஜோயல் (21), ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்த சந்திரமோகன் மகன் ராஜா (20). இவா்கள் மூவரும் மதுரையில் நடக்க இருக்கும் நண்பரின் இல்ல விழாவுக்கு செல்வதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா். அப்போது அங்கு போதையில் இருந்த 3 இளைஞா்கள் இவா்களைப் பாா்த்து கேலி செய்தனா். இதை அவா்கள் தட்டிக்கேட்ட போது வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மதுரைக்கு புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் கல்லூரி மாணவா்கள் மூவரும் ஏறி உட்காா்ந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, திடீரென அங்கு வந்த 6 போ் பேருந்துக்குள் உட்காந்திருந்த மூவரை கீழே இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கினா். இதில் சிவக்குமாா், ஜோயல், ராஜா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனா். இதனடிப்படையில், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த சோ்வாரன் மகன் வைரமுத்து (24), முருகன் மகன் ராமச்சந்திரன் (20), செந்தில்குமாா் மகன் ராம்குமாா் (20), தெற்கு மலையடிப்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பரத்வாஜ் (20) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments