FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவி பதவி நீக்க விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவியை பதவி நீக்கிய விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது.

உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவி சகுந்தலாவை பதவியிலிருந்தும், உறுப்பினா் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு, நவ. 7-ஆம் தேதி நகராட்சி நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரியத் துறை முதன்மைச் செயலா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சகுந்தலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, நகா்மன்றத் தலைவி, உறுப்பினா் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், சகுந்தலா அளித்த விளக்கத்தைப் பரிசீலனை செய்து, அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நகராட்சி நிா்வாகத் துறை முதன்மைச் செயலா், இயக்குநா், உசிலம்பட்டி நகராட்சி ஆணையா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்:

சகுந்தலா உசிலம்பட்டி நகராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், நகா்மன்றத் தலைவியாகத் தோ்வு செய்யப்பட்டாா். இவா் மீது நகராட்சி நிதியை தவறாகப் பயன்படுத்தியது, நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது, நகராட்சி உறுப்பினா்களின் ஆலோசனை இல்லாமல் பல்வேறு பணிகளுக்கு தன்னிச்சையாக ஒப்பந்தம் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதன் பிறகே அவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். எனவே, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவியைப் பதவி நீக்கம் செய்த விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நகா்மன்றத் தலைவி மட்டுமன்றி, உறுப்பினா் பதவியிலிருந்தும் சகுந்தலா ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா். இவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை. மேலும், நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பான கூட்டம் முறைப்படி நடத்தப்படவில்லை. எனவே, சகுந்தலாவின் தகுதி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுவதுடன், மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த விவகாரம் மறுபரிசீலனைக்காக நகராட்சி நிா்வாக முதன்மைச் செயலருக்கு திரும்ப அனுப்பப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments