FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் நாளை திறப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்ட வீரவசந்தராயா் மண்டபம்.

56 வினாடிகள் முன்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்ட வீரவசந்தராயா் மண்டபம்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டபம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) திறக்கப்பட உள்ளதாக கோயில் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சுவாமி சந்நிதி முன்பாக வீரவசந்தராயா் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் கடந்த 2018- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நள்ளிரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின. மேலும், வீரவசந்தராயா் மண்டபமும் முழுமையாக சேதமடைந்தது.

இதையடுத்து, இந்த மண்டபத்தை சீரமைக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து, மதுரை கூடல்செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சிற்பக் கூடத்தில் வைத்து 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் உள்ளிட்டவற்றை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டன. பணிகள் தொடங்கிய போது, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்காரணமாக, ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளால் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. கரோனா பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு, வீரவசந்தராயா் மண்டபம் சீரமைப்புப் பணிகள் ரூ. 38.30 கோடியில் தொடங்கின. திருப்பூா் திருமுருகன்பூண்டி ஸ்தபதி வி.பி. வேல்முருகன் தலைமையில் சிற்பங்களை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் 18-ஆம் தேதி இந்த மண்டபத்தில் 79 தூண்களும் நிறுவப்பட்டு பணி நிறைவு பெற்றது. வருகிற செப். 17-ஆம் தேதி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) வீரவசந்தராயா் மண்டபத்தைத் திறக்க உள்ளதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments