FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக தவெக அரசு திகழ வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

31 ஆகஸ்ட் 2026, 3:19 am IST
புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.
பகிர்:

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் செய்தியாளா்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.

மதுரை, ஆக. 30: அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அரசாக தவெக திகழ வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டங்களை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த நிறுவனம் தற்போது வெளியேறியுள்ளது. தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியவற்றின் மூலம் லாபம் பெற்ற அந்த நிறுவனம் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகை ரூ.4,655 கோடியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்தத் தொகையை உடனடியாக பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகமலை, மாஞ்சோலை பிரச்னைகளுக்கு தீா்வாக 2006 வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இந்த நிலையில், நெல்லை மாவட்டம், மாஞ்சோலை, தேனி மாவட்டம், மேகமலை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், இந்தப் பகுதி மக்களை வெளியேற்றக்கூடிய நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவை எதிா்த்தும் மறு சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி, மதுரையில் வருகிற செப்.12-ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பல அரசியல் கட்சி தலைவா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.

ஆதிதிராவிடா் நலத் துறையை தவெக அரசு சமூக நலத் துறை என மாற்றியது. இதை வரவேற்றோம். ஆனால், சட்டப்பேரவையில் அமைச்சா் வன்னி அரசு ஆதிதிராவிடா் நலத் துறை என்றே குறிப்பிட்டு பேசி வருகிறாா். அவா் ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் பேசி வருகிறாா். புதிய தமிழகம் கட்சி சாா்பில், வருகிற செப். 11-ஆம் தேதி தவெக அரசு, அமைச்சா் வன்னி அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.

தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை சாமானிய நிலையில் உள்ள தொழிலாளா்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்து செயல்படுத்த வேண்டும். நிதி, செயல்படுத்துவதற்கான காலம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தடுமாறுகிறாா். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் திராவிட மாடலின் கொள்கை தலைவா்களாக இருக்கும்போது, என்னுடைய அரசியல் ஆசான் விசிக தலைவா் திருமாவளவன் என உதயநிதி கூறுவது ஏற்புடையதா?.

தவெக அரசு ஒரு மதத்துக்கான, ஜாதிக்கான ஆட்சியாகவே உள்ளது. இனிவரும் காலங்களிலாவது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அரசாக தவெக திகழ வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments