தவெக அரசு சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி
மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என்றால் தவெக சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி பேட்டி குறித்து...
கோவை: மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என்றால் தவெக சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
ஜனவரி முதல் டிசம்பர் வரை காவிரி நதி நீர் மேலாண்மை வாரிய விகிதாசாரபடி தண்ணீர் திறந்துவிடாமல் வேளாண்மையை பாதிக்கும் வகையில் கர்நாடகம் நடந்து கொள்வதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணையை கட்டும் முயற்சியை கண்டித்தும் சென்னையில் அனைத்துக் கட்சிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மீண்டும் வரும்16 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட இருக்கிறோம்.
Advertisement
Advertisement
தமிழக அரசு மெத்தனம்
காவிரி பிரச்னையில் தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது. கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் நமக்கு வந்திருக்க வேண்டும். தண்ணீர் வராததால் இந்த முறை குறுவை சாகுபாடி செய்ய முடியவில்லை. குடிநீர் பிரச்னை, கால்நடைகள் மடிதல் என பல பிரச்னைகள் வர இருக்கின்றன.
கனவு திட்டம்
மேக்கேதாட்டு அணையை கனவு திட்டமாக செயல்படுத்த கர்நாடக முதல்வர் சிவக்குமார் முயற்சிக்கிறார். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகின்றனர். அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதே போதும். அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என ஆளுங்கட்சியினர் சொல்கின்றனர்.
கர்நாடக விளைநிலம் அளவு 30 லட்சம் ஏக்கராக உயர்வு
தமிழகத்திற்கு முன்பு 600 டிஎம்சி தண்ணீர் வந்து கொண்டுடிருந்தது. 30 லட்சம் ஏக்கர் விளைநிலம் இப்போது 3 லட்சமாக சுருங்கிவிட்டது. கர்நாடகத்தின் விளைநிலம் 30 லட்சம் ஏக்கராக உயர்ந்துவிட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டம் ஏன்?
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மறுக்கும் தவெக அரசு, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்துக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறது.
வரலாற்றுப் பிழையை செய்துவிடக்கூடாது
தொகுதி மறுவரையறை மக்கள் பிரச்னையே இல்லை என தவெக சொல்லியது. இப்போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியும், அங்குள்ள ரசிகர்களும் வெறுப்பு கொள்வார்கள் என்பதால் நடத்த மறுக்கின்றனர். தவெக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தாமல் வரலாற்றுப் பிழையை செய்துவிடக்கூடாது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும்.
அதிகாரம் நடுநிலை அமைப்பிடம் இருக்க வேண்டும்
பிலிகுண்டுலுவில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் நடுநிலையோடு இருக்கும் அமைப்பிடம் இருக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக சென்னையில் வரும் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூடி பேச இருக்கிறோம்.
காங்கிரஸ் பல்டி
தேர்தலுக்கு முன்பு வரை நியாயமான தொகுதி மறுவரையறை என்பதில் இருந்து காங்கிரஸ் பல்டி அடித்து தமிழகத்தில் தொகுதி மறுவரையறை தேவையில்லை என சொல்கிறது. இது அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவில், மக்கள் தொகை விகிதாசாரத்தில் மறுசீரமைப்பு நடைபெறும். அப்போது பாதிப்பு வரும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?. தமிழ்நாட்டுக்கு காவிரி விவகாரத்திலும் குந்தகம், மறுசீரமைப்பிலும் குந்தகம் என அரசின் செயல்பாடுகள் அமையக் கூடாது.
காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது
காங்கிரஸ் கட்சிக்கு சிறு நெருக்கடி கூட வந்து விடக்கூடாது, அந்தக் கட்சியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவில்லை என குற்றஞ்சாட்டுகிறேன்.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தமிழக மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகி விட்டது இந்த அரசு. தன்னுடைய நலன், செல்வாக்கு போன்றவற்றுக்காக தமிழக நலனை விட்டுக்கொடுக்க தயாராகி விட்டனர்.
தவெகவின்பலகீனத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களைத் திரட்டி ஓரணியில் நிறுத்துவது என்பது அடிப்படைத் தேவையாகும்.
குனிந்து கொண்டு சென்றது ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம் ஏற்கெனவே சட்டப்பேரவையில் பலமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவெக அரசு முதலில் பாடியிருக்க வேண்டியதுதானே? ஏன் இவர்கள் குனிந்து கொண்டு சென்றார்கள்? இந்த அரசு ஏன் அப்படி குனிந்து கொண்டு செல்கிறது?. பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இதைத்தான் பாடுவோம் என சொல்ல வேண்டும்.
சரணாகதி அடைய தயாராக இருக்க வேண்டும்
மத்திய அரசுடன் மோதல்போக்கு இல்லை என்றால் சரணாகதி அடைய இந்த அரசு தயாராக இருக்க வேண்டும். அதேநேரம் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்த்துதான் சொல்ல வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் நிகழ்ச்சிக்கு ஆளுநர் வரவில்லை என்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?, ஆளுநர் இல்லாமல் நடத்துவார்களா என்ற கேள்வி உள்ளது என்று அவர் கூறினார்.
If there is no confrontational stance towards the Central Government, TVK must be prepared to surrender.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.