கோயிலில் மாற்று மத எம்எல்ஏ தரிசனம்: எதிா்ப்புத் தெரிவித்தவருக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரை பாண்டி முனீசுவரா் கோயிலில் மாற்று மதத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் சுவாமி தரிசனம் செய்தது தொடா்பான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளைப் பாதுகாக்கக் கோரிய மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மதுரை பாண்டி முனீசுவரா் கோயிலில் மாற்று மதத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா் சுவாமி தரிசனம் செய்தது தொடா்பான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளைப் பாதுகாக்கக் கோரிய மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் முருக கணேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் 300 ஆண்டுகள் பழைமையான பாண்டி முனீசுவரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலைத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு மாற்று மதத்தைச் சோ்ந்த தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவா் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அப்போது, கோயில் நடை சாத்தப்பட்டதால் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, கோயில் பணியாளா் கருவறையைத் திறந்து அவரை அனுமதித்தாா். இது ஆகம விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்து புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, பாண்டி முனீசுவரா் கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பதிவான காட்சிகளைப் பாதுகாத்து வைக்க மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை பாண்டி முனீசுவரா் கோயிலில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் சுவாமி தரிசனம் செய்ததில் என்ன தவறு உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினாா். அப்போது, பாண்டி முனீசுவரா் கோயிலில் ஆகம விதிகளை மீறி உள்ளனா் என்பதன் அடிப்படையிலேயே சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கக் கூறுகிறோம் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கோயிலில் இரவு 9 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்வது தவறாகாது. மனுதாரா் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதி எச்சரித்தாா். இதையடுத்து, மனுதாரா் தனது மனுவை திரும்ப பெற்றுக் கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.