FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கிடா முட்டு திருவிழாவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: உயா்நீதிமன்றம் உத்தரவு

உரப்பனூா் கிராமத்தில் கிடாமுட்டு திருவிழாவுக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:16 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள உரப்பனூா் கிராமத்தில் கிடாமுட்டு திருவிழாவுக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்குள்பட்ட உரப்பனூா் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ள கிடா முட்டு திருவிழாவுக்கு திருமங்கலம் காவல் துறையினா் அனுமதி வழங்க மறுத்தனா். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து, ஆண்டுதோறும் கிடா முட்டு திருவிழாவை நடத்த காவல் துறை அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய பல்வேறு தீா்ப்புகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்படி, கிடா முட்டு திருவிழாவை காவல் துறையினரும், அரசுக் கால்நடை மருத்துவரும் கண்காணிக்க வேண்டும். இதில் பங்கேற்கும் ஆடுகளுக்கு எந்தவித காயமும் ஏற்படக் கூடாது.

ஆடுகளுக்கு மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கொடுக்கக் கூடாது, ஆடுகளின் கொம்புகளிலோ அல்லது கால்களிலோ கத்தி போன்ற ஆபத்தான பொருள்களைக் கட்டக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நிகழ்வுக்கு முன்பாக கால்நடை மருத்துவரின் சான்றிதழ், வருவாய்த் துறை சான்றிதழ், தீயணைப்புத் துறை பாதுகாப்புச் சான்றிதழ், மின்சாரப் பாதுகாப்புச் சான்றிதழ், நில உடைமையாளரின் தடையில்லாச் சான்றிதழ் ஆகியவற்றை மனுதாரா் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் கிடா முட்டு திருவிழாவுக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments