கருவேல மரங்கள் நிறைந்த பேரையூர் பெரிய கண்மாய்: 1,113 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
கமுதி அருகே பேரையூர் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், 1,113 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கமுதி அருகே பேரையூர் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், 1,113 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கண்மாய் 3 கி.மீ. நீளமும், 235. 41 ஏக்கர் பரப்பளவும், 376. 58 ஹெக்டேர் பாசன பரப்பளவும் கொண்டது. குண்டாறால் நேரடி பாசனம் கொண்ட இக்கண்மாய் மூலம் 1,113 ஏக்கர் விவசாய நிலம் பயனடைகிறது.
பருவமழை பொய்த்து குண்டாற்றில் சில ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால், கண்மாயில் தண்ணீர் தேங்காமல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, காடு போல் மாறியுள்ளது. கண்மாய் கரைகள் மராமத்து செய்யப்படாததால் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கண்மாய் நீர்பிடிப்புப் பகுதிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
கண்மாய் பகுதிகளுக்குள் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், இரவு நேரங்களில் மணல் கடத்தலும் நடந்து வருகிறது. 14 ஆண்டுகளுக்கு மேலாக மராமத்து செய்யாததால், நீர்பிடிப்பு பகுதிகள் மண்மேடாக மாறியதோடு 4 மடைகள் சேதமடைந்து வருகின்றன.
எனவே மழை காலம் துவங்குவதற்குள் கண்மாய்க்குள் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, சேதமடைந்து வரும் பாசன மடைகளை மராமத்து செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.