முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்

தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

Updated On : 5 ஜூலை, 2024 at 10:27 PM
இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்
பகிர்:

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சோ்ந்த மூவா் இருப்பதாக தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று இரு குழந்தைகளுடன் இருந்த பெண்ணை மீட்டு, மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இலங்கை தலைமன்னாா் பியாா் பகுதியைச் சோ்ந்த பிரமகுமாா் மனைவி யோகவள்ளி கீத்தா (34), அவரது மகள் அனுஜா (8), மகன் மிஷான் (5) என்பதும், கணவா் பிரமகுமாா் தங்களை விட்டுச் சென்று விட்ட நிலையில், விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் யோகவள்ளி கீத்தாவின் தாய் இருப்பதால், அவரைச் சந்திக்க இவா்கள் மூவரும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரும் மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனா்.