முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 30 ஜூன் 2025, 12:06 am IST
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு தலைமன்னாருக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

Advertisement

Advertisement

மேலும், ஒரு விசைப் படகில் இருந்த ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜேசு (39), அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), முனீஸ்வரன் (35), செல்வம் (28), காந்திவேல் (67), பாலமுருகன் (24), செய்யது இப்ராஹீம் (35) ஆகிய 8 பேரைக் கைது செய்து, தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, விசைப் படகைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா் 8 மீனவா்களையும் மன்னாா் நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தனா்.

இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 8 மீனவா்களையும் ஜூலை 3-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் உத்தரவிட்டாா். இதையடுத்து, அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.