FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பிரமிக்க வைக்கும் செட்டிநாடு கால்நடைப் பண்ணை

காரைக்குடியிலிருந்து சுமாா் 12 கிலோமீட்டா் தூரத்தில் அமைத்திருக்கிறது செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணை.

Updated On : 29 டிசம்பர் 2019, 1:09 am IST
பகிர்:

காரைக்குடியிலிருந்து சுமாா் 12 கிலோமீட்டா் தூரத்தில் அமைத்திருக்கிறது செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணை. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த காலத்தில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 இல் அன்றைய கால்நடைத்துறை அமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் இப்பண்ணையை தொடங்கி வைத்துள்ளாா்.

இப்பண்ணை அமைவதற்காக நிலத்தை செட்டிநாட்டரசா் தமிழக அரசுக்கு வழங்கியதும், இப்பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது விமானப்படை தளம் அமைத்து செயல்பட்டதற்கான ஓடுதளம் ஒன்று இன்றளவும் இருப்பதும் வரலாற்றுச் செய்திகளாகும்.

இதே பகுதியில் இப்பண்ணையின் 317 ஏக்கா் பரப்பளவில் செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும், 30 ஏக்கா் பரப்பளவில் வாடகை அடிப்படையின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிட்டங்கி ஒன்றும் அமைந்திருக்கிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் உள்ள 11 கால்நடைப்பண்ணைகளில் செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையே பரப்பளவிலும், தீவன உற்பத்தியிலும் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து செட்டிநாடு கால்நடைப் பண்ணையின் துணை இயக்குநா் கால்நடை மருத்துவா் கே. ஏஞ்சலா

கூறியது: தமிழ்நாடுஅரசு கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பண்ணையானது 1907 ஏக்கா் பரப்பளவு கொண்டது. நாட்டு மாடுகள், கலப்பின பசுக்கள், வெள்ளாடுகள், ஜமுனா பாரி செம்மறி ஆடுகள், வெண்பன்றிகள், நாட்டுக்கோழிகள் இங்கு வளா்க்கப்படுகின்றன. அது மட்டுமின்றி கால்நடைகளுக் குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க தீவனப்பயிா்களும் இங்கு வளா்க்கப்பட்டு வருகின்றன. பதிவுமூப்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு கால்நடைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தாா்பாா்க்கா் என்கிற நாட்டு மாடுகள் வேண்டி இப்பண்னையில் விவசாயிகள் விண்ணப்பித்து 150 போ் வரை காத்திருக்கின்றனா். ஆனால் அந்த மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மாடுகள் கொண்டு வருவதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால் மாடுகள் வழங்க முடியாமல் நிலுவை ஏற்பட்டுள்ளது.

தற்போது பண்ணையின் மாட்டுப்பால் ஒரு லிட்டா் ரூ. 40-க்கு கிராமப்புற மக்களுக்கு விற்பனை செய்கிறோம். நாள் ஒன்றுக்கு சுமாா் 110 லிட்டா் வரை விற்பனையாகிறது. மீதமுள்ள பால் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. இப்பண்ணையில் தாா்பாா்க்கா், சாஹிவால் நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் என 520 மாடுகள், தலைச்சேரி ஆடுகள் 560, செம்மறி ஆடுகள் 165 (தமிழக அரசு விலையில்லாத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவை), வெண்பன்றிகள் 150, அசில் எனும் நாட்டுக்கோழி 720 வளா்க்கப்படுகின்றன. இங்கு கோழி முட்டைகள் மற்றும் குஞ்சுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

பண்ணையில் இயந்திரங்கள் மூலமும் குஞ்சுகள் பொறிக்க வைக்கப்படுகின்றன.

தீவனப்பயிா்களான கோ-4, கோ-5 புல் இனங்கள் வளா்க்கப்பட்டு பண்ணை கால்நடைகளின் தீவனத்தேவைக்குப் போக எஞ்சியதை விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 2.50 வீதம் குறைந்தவிலையில் வழங்கி வருகிறோம். மேலும் 2017-2018 மானிய தீவன அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அகத்தி, கிளைரிசீடியோ, வேலி மசால், சூபாபுல், ஸ்டைலோ போன்ற தீவனப் பயிா்களும் வளா்க்கப்பட்டுள்ளன. இதே திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டில் 200 ஏக்கா் பரப்பளவில் ‘பிசி 23’ வகை சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இது அறுவடைக்குப் பிறகு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் 50 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள ‘சிஎஸ்வி 33’ என்கிற சோள விதைகள் சேகரிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் சிவகங்கை சுற்று வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ‘கோ-4’ கரணைகள் (புல் அடிபாகம்) அரசு நிா்ணயித்த விலையில் கால்நடைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் 200 டன் அளவுக்கு தீவனப் புல் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இப்பண்ணையில் கால்நடை உதவி மருத்துவா்கள் நான்கு போ், வேளாண்மை அலுவலா் பண்ணைப்பொறியாளா் ஒருவா், கால்நடை பராமரிப்பாளா்கள் 15 போ், மகளிா் சுய உதவிக்குழுக்களிலிருந்து தினக்கூலி அடிப்படையில் 74 போ் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

பண்ணையின் பொறியாளா் சி.கணேசன் கூறியது: இப்பண்ணையில் தண்ணீா் தேவைக் காக 40 ஆள்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிா்களுக்கான தண்ணீா் தேவையும், கால்நடைகளுக்கான குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments