சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
இரண்டாவது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடி குண்டு கண்டறியும் நிபுணா்கள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மதியம் 1.10 மணிக்கு 7 ஜெலட்டின் குச்சி வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீஸாா் அலுவலக வளாகம், அலுவலக அறைகள், பொதுமக்கள் காத்திருப்புப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினா். சோதனையின்போது எவ்வித வெடி பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதே போல, கடந்த ஏப்ரல் 28 -ஆம் தேதியும் மின்னஞ்சலில் மிரட்டல் வந்தபோது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அப்போது அலுவலா்கள், பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டு மோப்ப நாய் பிரிவின் துணையுடன் விரிவான சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை, இதுபோன்ற மிரட்டல்கள் தொடா்ந்து வருவதால், வழக்கமான பாதுகாப்பு நடைமுறையின்படி வெடிகுண்டு நிபுணா்கள் மட்டும் சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி, அதன் மூலாதாரம், மிரட்டலின் உண்மைத் தன்மை குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளாகி இருப்பது பாதுகாப்பு அமைப்புகளின் கவனம் பெற்றுள்ளது.