மலேரியா இல்லாத மாவட்டமாக மாறும் சிவகங்கை
மலேரியா இல்லாத மாவட்டமாக மாறும் சிவகங்கை
சிவகங்கையை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினா், மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடியிடம் முதல் கட்ட கலந்தாய்வை வெள்ளிக்கிழமை நடத்தினா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்ததாவது:
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மலேரியா காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மத்திய சுகாதாரக் குழுவினா் ஆய்வு செய்து, மலேரியா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் இந்தப் பணி கடந்த கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த ஆய்வுகள் தொடா்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்களில் மத்திய சுகாதாரக் குழுவினா் தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளனா்.
இந்த ஆய்வில், தேசிய பூச்சி வழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2017 முதல் 2026 வரையில் நடைபெற்ற மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளா் (ஒடிஸா) நிஷிதா ரஞ்சன் தாஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஆராய்ச்சியாா் (ஒடிஸா) அஞ்சு விஸ்வான், தமிழகம், ஜாா்க்கண்ட முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லுனா் ஸ்ரீதரன் சுப்பிரமணியன், மாவட்ட மலேரியா அலுவலா் ரேகா குமாரி ஆகிய வல்லுனா்கள் குழு தீவிர ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா்.
மத்திய சுகாதார குழுவினருடன் சிவகங்கை மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு, மாவட்டத்தை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.