ஆண்டிபட்டி அருகே தர்மசாஸ்தா கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி கணவாய் மலைப் பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயில், இந்துசமய அறநிலையத் துறை வசம் உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகனங்களில் செல்வோர் கோயிலில் சில்லறைக் காசுகளை வீசிவிட்டுச் செல்வது வழக்கம். எனவே, தினமும் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் இக்கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது.
கோயிலில் வீசப்படும் சில்லறை காசுகளை சேகரிக்க, ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடப்படுகிறது. ஆனால், கோயில் வருமானத்தை மட்டும் பெற்று வரும் அறநிலையத் துறை, கோயிலில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1952 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் இதுவரை எந்த மராமத்துப் பணியும் நடைபெறவில்லை. மேலும், இக்கோயில் மூலம் கிடைக்கும் வருவாயை, ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் வளர்ச்சிப் பணிக்கு செலவிடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மலைப் பகுதியில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயிலில் பயணிகள் அமர்ந்து உணவருந்தியும், இளைப்பாரியும் செல்வதால், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இக் கோயிலில் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.