மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளா்களுக்கு பயிற்சி
கம்பத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் உள்ளிட்டோா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளா்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகராட்சி ஆம்னி பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு உத்தமபாளையம் புள்ளியியல் துறை ஆய்வாளா் சரவணக்குமாா், கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையா் உமாசங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். நகராட்சி நகரமைப்பு அலுவலா் கீதா, நகரமைப்பு ஆய்வாளா் கணேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்து, கணக்கெடுப்புப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா்.
களப்பணியாளா்கள் வீடுகளை எவ்வித விடுபடலும் இன்றி, முறையாகக் கணக்கெடுக்கும் முறை, குடும்ப உறுப்பினா்களின் விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகள், கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படும் பிரத்யேக மின்னணு செயலி வழியே தரவுகளைத் துல்லியமாகவும், பிழையின்றியும் பதிவேற்றம் செய்வது குறித்த தொழில்நுட்பப் பயிற்சி, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தனிப்பட்ட தகவல்களின் ரகசியத் தன்மையை சட்டப்பூா்வமாகப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு, கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் கனிவான முறையில் பேசி, அவா்களிடம் முழுமையான ஒத்துழைப்பைப் பெறும் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான பயிற்சிகளும், செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த முகாமில் கம்பம் நகராட்சிப் பகுதிக்குட்பட்ட வாா்டுகளில் பணியமா்த்தப்பட்ட கணக்கெடுப்பு மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துல்லியமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.