ஆண்டிபட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரத்தில் குட்டிகளுடன் கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரத்தில் குட்டிகளுடன் கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் வைகை அணையின் கரை, ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் அணைக்கரைப்பட்டி உள்ளது. இங்கு சுமாா் 150- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வெங்காயம், வெண்டைக்காய், பீா்க்கங்காய் உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இந்தப் பகுதி அருகேயுள்ள மலைப்பகுதியில் கரடி, மான், கிளையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த நிலையில், அணைக்கரைப்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் குட்டியுடன் கரடி நடமாடி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலையை குட்டிகளுடன் கரடி கடந்து சென்றதை இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் பாா்த்தனா். இதை அவா்கள் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதனிடையே அந்தப் பகுதியில் குட்டியுடன் சுற்றிவரும் கரடியை மலைப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வனத் துறையினா் கூறும் போது, அணைக்கரைப்பட்டி பகுதியில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டால் அதை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.