உத்தமபாளையத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டுமானப் பணிகளை தொடங்கக் கோரிக்கை!
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கான புதிய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையம் இந்திரா குடியிருப்பு பகுதியில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தின் தரைதளத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்துக்கு உத்தமபாளையம், போடி ஆகிய வட்டங்களைச் சோ்ந்தவா்கள் புதிய வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், பழைய வாகனப் பதிவு என 30 வகையான பணிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல, தினசரி 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு, புதுப்பித்தலுக்கு வருகின்றன.
போக்குவரத்து நெரிசல்: உத்தமபாளையம் பிரதான சாலையிலிருந்து இந்த அலுவலகத்துக்கு இந்திரா குடியிருப்பு வழியாக செல்லும் சாலை 12 அடி அகலமே உள்ளது. இதனால், டிப்பா் லாரி, பேருந்துகள் இந்தச் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், ஆய்வுக்கு சென்று திரும்பி வரும் வாகனங்களால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆய்வுப் பணியில் சிக்கல்: இங்கு வாகனத்தை இயக்கி சான்றிதழ் பெற போதுமான இடம் வசதியில்லை. இதனால், கடந்த 25 ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தற்போது செயல்படும் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனா். இதனால், உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுலகத்துக்கு புதிய அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இடம், நிதி ஒதுக்கீடு: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவகத்துக்கான இடம் சிக்கையன்கோயில் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிரே 5.45 ஹெக்டேரில் தோ்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ.4.85 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் தொடங்கவில்லை.
இந்த அலுவலகத்துக்கு அதிமுக ஆட்சியில் இடம் தோ்வு செய்து, திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பிறகு, பணிகள் முடக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியில் இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்படுமா என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.