சுதந்திர தின விழா: விருதுநகரில் ரூ.77.94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து
விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 106 பயனாளிகளுக்கு ரூ.77.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய 219 பேருக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வழங்கினார்.
இவ்விழாவில் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட ஆட்சியர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்தார். பின்னர், வேளாண்மைத் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.36,176 மதிப்பிலான மழைத்தூதுவான் கருவியையும், ஒரு பயனாளிக்கு ரூ.381 மதிப்பிலான உளுந்து விதைகளையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.207 மதிப்பலான நுண்ணூட்ட உரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.95,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினார்.
மேலும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.7,02,100 மதிப்பில் வங்கிக் கடனையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.58,840 மதிப்பில் இலவச இணைப்புச் சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனத்தையும், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் போரில் ஊனமுற்ற படைவீரர் மற்றும் விதவையருக்கு வருடாந்திர பராமரிப்பு உள்ளிட்ட உதவித் தொகைகளை 5 பேருக்கு ரூ.1,22,023 மதிப்பிலும் வழங்கினார்.
மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 93 ஆயிரத்து 727 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அத்துடன் தங்களது துறையில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக காவல் துறையில் 77 பேர், வருவாய்த்துறையில் 28 பேர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 4 பேர், புள்ளியல் மற்றும் சுரங்கத்துறையில் ஒருவர், கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் 6 பேர், வேளாண் வணிகத்துறையில் ஒருவர், விதைச்சான்றுத்துறையில் ஒருவர், தோட்டக்கலைத்துறையில் 3 பேர், வேளாண்மை பொறியியல் துறையில் 2 பேர், பொதுப்பணித்துறை(கட்டிடம்)யில் 5 பேர், வேளாண்மைத்துறையில் 6 பேர், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறையில் 6 பேர், கால்நடைத்துறையில் ஒருவர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணியில் 5 பேர், சுகாதாரத்துறையில் 30 பேர், தீயணைப்புத்துறையில் பேர், ஊரக வளர்ச்சித்துறையில் 34 பேர், வங்கித்துறையில் 3 பேர் என மொத்தம் 219 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதி (குற்றப்பிரிவு), ஞானசிவக்குமார் (மதுவிலக்கு), திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்லப்பா (அருப்புக்கோட்டை), மங்களராமசுப்பிரமணியன் (சாத்தூர்), தினகரன் (சிவகாசி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், விருதுநகர் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.