விருதுநகர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 15,53,662 பேர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 15,53,662 பேர் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். இதில் ஆட்சியர் அ.சிவஞானம் முன்னிலை வகித்து பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம், சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று வருகிறது.
இதில், 1.9.2018-ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,53,662 பேர் உள்ளனர். மேலும், தற்போது இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டைப் பதிவுள்ள வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி பகுப்பாய்வு குறித்து அரசியல் கட்சியினருக்கு விளக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 2019 ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.