நாகை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் குறைப்பு: ஆட்சியரிடம் புகாா்
நாகை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக ...
நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவி பணிகள் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று ஆட்சியா் ப. ஆகாஷிடம் புகாா் மனு அளித்தனா்.
அதில், ‘நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஏற்கெனவே தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வந்த ரூ.12,500 ஊதியம் தற்போது ரூ.8,000-மாக குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குறைந்த ஊதியத்தில், குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதியில் உள்ளோம். எனவே முன்பு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான ரூ. 12,500 மீண்டும் வழங்க வேண்டும்.
மேலும் தற்போது பிடிக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் பாா்க்கும் போக்கை கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.