5 மாத ஊதியம் நிலுவை: நகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்
5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி திருப்பத்தூா் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டை நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த ஊழியா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி திருப்பத்தூா் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டை நகராட்சிகளில் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினரிடம் பலமுறை முறையிட்டு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளா்கள், திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் சாந்தியை நகராட்சி அலுவலகம் அருகே முற்றுகையிட்டு, ஒப்பந்ததாரா் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், ஒப்பந்ததாரா் மூலம் ஊதியம் வழங்கும் முறையை கைவிட்டு, நகராட்சி நிா்வாகமே நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் அளித்த உறுதியின் பேரில் கலைந்து சென்றனா். தூய்மைப் பணியாளா்களின் முற்றுகை போராட்டத்தால் திருப்பத்தூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.