FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

தமிழகத்துடன் இணைந்து செயல்படாததால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிப்பு: அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவர்

காவிரி உள்ளிட்ட எதிலும் தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட முன்வராததால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதித்துள்ளது என்றார் புதுச்சேரி மாநில அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவர்  ஏ. அன்பழகன்.

Updated On : 26 ஜூன் 2018, 8:41 am IST
பகிர்:

காவிரி உள்ளிட்ட எதிலும் தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட முன்வராததால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதித்துள்ளது என்றார் புதுச்சேரி மாநில அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவர்  ஏ. அன்பழகன்.
காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: காவிரி மேலாண்மை ஆணைய அமைப்பின் முழு வெற்றிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகவே காரணம். தமிழகத்துடன் இணைந்து செயல்படவேண்டிய புதுச்சேரி அரசு இணக்கமாக இணைந்து செயல்பட முன்வரவில்லை.
 இதனால், காவிரி, மணல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை புதுவை மாநில மக்கள் சந்திக்கிறார்கள். சொந்த மாநில மக்களுக்கு புதுச்சேரி அரசு துரோகம் செய்துள்ளது.
கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசுக்கு சாதமாகவே நாராயணசாமி அரசு காவிரி விவகாரத்தில் நடந்துகொண்டது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் அளித்தபோது, தமிழக சட்டப் பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், புதுச்சேரி அரசு அவ்வாறு செய்யவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. புதுச்சேரி அரசு தமது எதிர்ப்பைக் கூட தெரிவிக்க முன்வரவில்லை.
துணை நிலை ஆளுநரும், முதல்வரும் மாறி மாறி மலிவு கோஷங்களை, விளம்பர நோக்கில் செய்து வருகின்றனர். இதனால், மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. இதில், புதுச்சேரி மாநில வளர்ச்சி பாதித்துள்ளது. ஒருபுறம் ஆளுநருக்கு எதிர்ப்பு, மறுபுறம் காங்கிரஸுக்கு எதிர்ப்பு என புதுவை திமுக இரட்டை வேஷம் போடுகிறது. எந்தவொரு நன்மையும் இந்த அரசால் மக்களுக்கு ஏற்படாதபோது, ஆளும் அரசுக்கு அளித்திருக்கும் ஆதரவை திமுக திரும்பப் பெறத் தயாரா ?
இலவச அரிசி தரப்படவில்லை, ரேஷன் கடையில் எந்தவொரு பொருளும் இல்லை, நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தவில்லை. காரைக்காலில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவில்லை.
காரைக்காலில் மின்தடை ஏற்படுகிறது. குடிநீர் சுகாதாரமாக கிடைக்கவில்லை, புதைச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றவில்லை. போலகத்தில் 600 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலைகள் ஒன்றைக்கூட அமைக்க புதுச்சேரி அரசால் முடியவில்லை. இந்த இடத்தில் விமான  தளம் அமைத்தால்கூட காரைக்கால் வளர்ச்சி அடையும். 
காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. காரைக்காலுக்குரிய 7 டிஎம்சி காவிரி நீரை பெற நாராயணசாமி அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் காரைக்காலை இந்த அரசு வஞ்சித்துவிட்டுவிட்டது. தமிழகத்துடன் இந்த அரசு இணைந்து செயல்பட்டால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு என்றார் அன்பழகன். 
அதிமுக மாவட்டச் செயலர் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காரைக்கால் தெற்குத் தொகுதி 
சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments