துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துசெல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மதிமுக தொண்டர் போராட்டம்: வைகோ சமாதானம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே மதிமுக தொண்டர் ஒருவர், அப்பகுதியில் உள்ள செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி, வியாழக்கிழமை
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே மதிமுக தொண்டர் ஒருவர், அப்பகுதியில் உள்ள செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி, வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேளாங்கண்ணி அருகே வண்டலூர் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் திலகர் என்ற இளையராஜா(30). கூலித் தொழிலாளியான இவர், மதிமுக தொண்டர் அணியில் உள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணி அளவில், வண்டலூரில் உள்ள ஒரு செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அமர்ந்த இளையராஜா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
கீழ்வளூர் வட்டாட்சியர் தையல்நாயகி, மற்றும் மதிமுக ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் வேளாங்கண்ணி போலீஸார், தீயணைப்புப் படையினர் செல்லிடப்பேசி மூலம், இளையராஜாவைத் தொடர்பு கொண்டு கீழே இறங்கி வர வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கோரிக்கையை ஏற்றால், கீழே இறங்குவதாக இளையராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில், செல்லிடப்பேசி மூலம் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மதிமுக ஒன்றிய நிர்வாகி மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இளையராஜாவிடம் செல்லிடப்பேசியில் பேசி சமாதானம் செய்ய வைகோ விரும்பியதையடுத்து, அவரது இணைப்புப் பெற்றிருந்த செல்லிடப்பேசி, தீயணைப்பு காவலர் மூலம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டது. செல்லிடப்பேசி மூலம் வைகோ கூறிய சமாதானத்தில் ஆறுதல் அடைந்த இளையராஜா தனது போராட்டத்தைக் கைவிட்டு, கீழே இறங்கினார். காலை 4 மணி அளவில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய அவர் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் காலை 9.15 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.