FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கஜா புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையின்றி உணவு வழங்க ஏற்பாடு: வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

நாகை மாவட்டத்தில் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு 3 வேளையும் தடையில்லாமல் உணவு, குடிநீர் வழங்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:


நாகை மாவட்டத்தில் புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு 3 வேளையும் தடையில்லாமல் உணவு, குடிநீர் வழங்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை தடையில்லாமல் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், வேளாண் துறை முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் க. பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தது:
நாகை மாவட்டத்தில் கஜா புயல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 523 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் தடையில்லாமல் உணவு மற்றும் குடிநீர் வழங்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியன தங்குத் தடையின்றி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் முறிந்து சரிந்திருக்கும் மரங்களை அகற்றும் பணிக்குக் கூடுதல் பொக்லைன் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் மருத்துவ உதவிகள் வழங்க ஒரு மருத்துவர் உள்பட 4 பேர் கொண்ட நடமாடும் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்துக் கிராமங்களுக்கும் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரவும், பால் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ககன்தீப்சிங் பேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments