பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அடிப்படை வசதிகள் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: இரா. முத்தரசன்
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீனம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்டு பல்வேறு பகுதிகளை இரா. முத்தரசன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கஜா புயல் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த 4 நாள்களாக மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நோய்த்தொற்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், சுகாதாரம், குடிநீருக்கு முன்னுரிமை கொடுத்து, துரித நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்திருப்பதால், மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களைக் கூடுதலாக பணியமர்த்த வேண்டும் என்றார் முத்தரசன்.
அப்போது, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் என். பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம், முன்னாள் எம்.எல்.ஏ. கே. உலகநாதன், ஒன்றியச் செயலாளர் கே. மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.