சீர்காழியில் மாணவனைக் கடத்த முயற்சி
சீர்காழியில் டியூசன் சென்ற பள்ளி மாணவனை காரில் மர்ம கும்பல் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழியில் டியூசன் சென்ற பள்ளி மாணவனை காரில் மர்ம கும்பல் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி கீழவீதியைச் சேர்ந்தவர் முத்து (37). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அகிலா (29). இத்தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். சீர்காழி ஊழியக்காரன்தோப்புப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், இவர்களது மகன் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் டியூஷனுக்கு நடந்து சென்ற சிறுவனை, மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பிடாரி வடக்குவீதி, கொள்ளிடமுக்கூடு வழியாக புறவழிச்சாலையில் மயிலாடுதுறை சாலையை நோக்கி கார் சென்றதாகவும், அப்போது காரில் இருந்த நபர் சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரம் நிறுத்தியதாகவும் தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மாணவன் காரிலிருந்து தப்பி ஓடிவந்ததாகவும், பின்னர் வைத்தீஸ்வரன்கோயில் செல்லும் சாலையில் செங்கமேடு அட்டகுளம் பகுதியில் ஒருவரிடம் செல்லிடப்பேசியை வாங்கி தனது தாயைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, அகிலா மற்றும் உறவினர்கள் அட்டகுளம் சென்று, சிறுவனை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் அகிலா அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.