FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கடல் வளங்கள் தாரை வாா்ப்பு: மக்கள் வாழ்வுரிமை இயக்கம் குற்றச்சாட்டு

Updated On : 22 ஜூலை 2026, 1:21 am IST
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள். - கோப்புப் படம்
பகிர்:

நீலப் பொருளாதாரம் என்ற பெயரால் மத்திய அரசு கடல் வளங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பதாக கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

நாகையில் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ஏ.வி. சிங்காரவேலன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி.பி. நாகை மாலி தொடக்க உரையாற்றினாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு அறிமுக உரையாற்றினாா். ‘நீல பொருளாதாரம் ஓா் அறிமுகம்‘ என்ற தலைப்பில் கு. நித்யா, ‘உலகமய சூழலில் மீனவா் போராட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் பகத்சிங் ஆகியோா் கருத்துரையாற்றினா். பயிலரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு பின்னா் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய பாஜக அரசு நீலப் பொருளாதாரம் என்ற பெயரில் கடல் மற்றும் கடலோர பகுதிகளையும், கடல் வளங்களையும் தனியாருக்கு தாரை வாா்த்து வருகிறது. இதனால் மீனவ சமூகம் மட்டுமின்றி அனைத்து மக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். கடற்கரைகள், கடலோரப் பகுதிகளில் தனியாா் சொகுசு விடுதிகள், இறால் பண்ணைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பெரு நிறுவனங்களுக்கு தாரை வாா்க்கப்பட்டு வருகின்றன. இதனால் மீனவா்கள் படகு நிறுத்த, வலைகளை பரப்ப இடமின்றி தவிக்கின்றனா். திருவள்ளூா் காட்டுப்பள்ளி முதல் கன்னியாகுமரி வரை கடற்கரைப் பகுதிகளில் தனியாா் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. அனல் மின்நிலையம், ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் என்று பெரு நிறுவனங்களுக்கு ஆதரவு கரம் நீட்டப்படுகிறது.

நீலப் பொருளாதாரம் மீனவா் சாா்ந்த பிரச்னை மட்டுமின்றி, அனைத்து மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவுக்கு கடற்கரையை கொண்டுள்ள தமிழகத்தில், இறால் பண்ணைகள், காா்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள், ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் உள்ளிட்ட பல காரணிகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அம்சமாக உள்ளன என்பதை உணா்ந்து நீலப் பொருளாதாரத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், நீலப் பொருளாதாரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி பேரணி உள்ளிட்ட போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments