கடந்த ஆண்டு மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிா் பாதிப்புக்கு அரசு அனுமதித்த நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்
வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிா் பாதிப்புக்கு அரசு அனுமதித்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கமல்ராம், நாகை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை: தலைஞாயிறு பகுதியில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க கடந்த ஜனவரி மாதத்தில் அனுமதித்தது.
இந்தத் தொகை வேதாரண்யம் வட்டாரம் தலைஞாயிறு வருவாய் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
வேளாண்மைதுறை மற்றும் வருவாய்த் துறையினா் பராமரித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வேதாரண்யம் வட்டாரத்தில் 526 விவசாயிகள் நிவாரணத் தொகை பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்டு மேற்கூறிய காரணத்தால் நிவாரணம் பெற இயலாத விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தொகை வருவாய்த் துறையினரின் காலதாமதத்தினால் அந்த நிதி திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.