எஸ்.பி. அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிக்கை
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்புறம் வழியாக காவல் கண்காணிப்பாளர், போலீஸார் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். புகார் அளிக்க வருவோர், போலீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வருவோர், இதர பணிகளுக்காக வருவோர் எல்லோரும் முன்புறம் தடுக்கப்பட்டு, கட்டடத்தின் பின்புறம் வழியாகவே செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் முன்புறம் இல்லாததால், போலீஸாரின் அறிவுறுத்தலுக்குப் பின்னரே மீண்டும் வளாகத்தை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது கட்டடத்தை சுற்றியுள்ள பாதையில் சிறு ஜல்லிகள் பெயர்ந்து, வெறும் காலுடன் நடப்பதற்கு சிரமமாக உள்ளதாக புகார் அளிக்க வருவோர் தெரிவிக்கின்றனர். எனவே, எஸ்பி அலுவலகத்தை சுற்றியுள்ள வளாகத்தைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகார் அளிக்க வருவோருக்கென எஸ்பி அறை அருகே நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தரைதளத்தில் எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை. பெரும்பாலான நேரங்களில் எஸ்பி வரும்வரை மேலே செல்ல அனுமதி வழங்கப்படாததால், தரைதளத்திலும் நாற்காலி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், கட்டடத்துக்கு வெளியிலேயே ஆங்காங்கே அமர வேண்டியுள்ளது. எனவே எஸ்பி அலுவலகத்துக்கு புகார் அளிக்க வருவோருக்கும், இதர பணிகளுக்காக வருவோருக்கும் தரை தளத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.