FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரபட்சமின்றி நிவாரணம் கோரி 166 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தில்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தில் 166 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு கோரிய நிவாரணத் தொகை ரூ. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடிசை, ஓடு, தொகுப்பு வீடுகள் மற்றும் மாடி வீடுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்; வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறு, குறு, நடுத்தர என்ற பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும்; கடந்த ஆண்டுக்குரிய பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்; அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்; கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் சார்பு விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர். 
திருவாரூரில்...
திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எம்.ஏ. மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று,  உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். 
இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பாஸ்கர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.பி. முருகானந்தம்,  நகர செயற்குழு உறுப்பினர் வீ. தர்மதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட 166 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதேபோல், நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆதனூர், பூவனூர், ஒளிமதி, சோணாப்பேட்டை, தேவங்குடி, கீழாளவந்தசேரி, பச்சைக்குளம், சேகரை, வெள்ளக்குடி, வாழாச்சேரி, பொதக்குடி உள்ளிட்ட இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  
வலங்கைமான் ஒன்றியத்தில் வலங்கைமான், ஆலங்குடி, கொட்டையூர் உள்ளிட்ட இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வலங்கைமானில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் நகர செயலாளர் அந்தேணிசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூரில்...
பண்டுதக்குடியில்  நகரச் செயலர் எம். சுதர்ஸன் தலைமையில், கோரையாற்றில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எம்.சிவதாஸ் தலைமையில், லெட்சுமாங்குடியில் மாவட்டக் குழு உறுப்பினர் கே. தவபாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதேபோல், கூத்தாநல்லூர், கமலாபுரம் பிர்காவில் கோரையாறு, மூலங்குடி, மணக்கரை, ஓவர்ச்சேரி, பாண்டுக்குடி, வடகோவனூர் உள்ளிட்ட 16 இடங்கள், வடபாதிமங்கலம் பிர்காவில் திருநெல்லிக்காவல், செருவாமணி, மாவட்டக்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 23 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தை அருகில் அக்கட்சியின்  மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி. சந்திரராமன், நகரச் செயலர் எம். முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தொடங்கி வைத்தார். இதில், கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட துணைச் செயலர் ஆர். ஞானமோகன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதேபோல், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் முன்பு, கட்சியின் நகரச் செயலர் மார்க்ஸ் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதேபோல், மணலி, ஆலத்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 
மன்னார்குடியில்...
மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலையருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வி.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கே. சுப்பராயன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ கே. ஆறுமுகம், கட்சியின் மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோர்  கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
 இதேபோல், மன்னார்குடி ஒன்றியத்தில் சவளக்காரன், வாஞ்சூர், மூலங்குடி, வடபாதிமங்கலம், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட 25 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 கோட்டூரில்...
கோட்டூர் கடை வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே. மாரிமுத்து தலைமை வகித்தார். இதேபோல் கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, திருமக்கோட்டை, தட்டாங்கோவில், களப்பால் உள்ளிட்ட 62 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments