புயல் சேத மதிப்பை குறைக்க பேரிடர் மேலாண்மைத் துறை நெருக்கடி: பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் தென்னை மரங்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் தென்னை மரங்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட பேரிடர் மேலாண்மைத் துறையிலிருந்து கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி .ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களும் கணக்கில் கொண்டுவரப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களை மட்டுமே கணக்கில் சேர்க்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் எனவும் அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக தெரியவருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து குடிசை வீடுகளுக்கும் முழு நிவாரணமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்துக்கேற்ப நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துவிட்டு, தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காக நிர்ணயம் செய்து, அதற்கேற்ப பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என களப்பணி அலுவலர்கள் மிரட்டப்படும் சூழ்நிலை உள்ளது. மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிவாரண வழிகாட்டு முறையைக் காரணம் காட்டி, இவ்வாறு மிரட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களுக்கும், வீடுகளுக்கும் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க வேண்டும். குறுகிய காலப் பயிர்கள் தற்போது, அறுவடைக்குத் தயாராக உள்ளதால், தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால் நிவாரணப் பணிகள் முடங்கும் நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என அந்த அறிக்கையில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.