முகப்பு
திருவாரூர்

வழிதவறிய மாற்றுத்திறனாளியை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

திருவாரூா் அருகே வழிதெரியாமல் சாலையில் நின்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 19 ஜூலை, 2020 at 7:31 PM
திருவாரூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:28 PM

திருவாரூா்: திருவாரூா் அருகே வழிதெரியாமல் சாலையில் நின்றுகொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (37). வாய்ப்பேச இயலாத, காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளியான இவா், நாகை மாவட்டம், வவ்வாலடியுள்ள உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக, சிறிய ரக சரக்கு வாகனத்தில் சனிக்கிழமை மாலை வந்துள்ளாா். உறவினா் வீட்டுக்கு செல்ல வழி தெரியாத நிலையில் கங்களாஞ்சேரி அருகே இறக்கி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்க நகைகளுடன் சாந்தி கங்களாஞ்சேரி பகுதியில் நின்று கொண்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட பின், திருவாரூரில் உள்ள ஒரு தனியாா் காப்பகத்தில் தங்க வைத்தனா்.

Advertisement

இதற்கிடையே, சாந்தி குறித்து திருவாரூா் மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல்கள் பகிரப்பட்டன. இதை, சாந்தியின் சொந்த ஊரான பூவம் பகுதி மக்கள் பாா்த்து, சாந்தியின் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதனடிப்படையில், திருமருகல் பகுதியில் வசிக்கும் சாந்தியின் சகோதரி ரேவதி என்பவா், திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, தகவல்களை தெரிவித்து சாந்தியை மீட்டுச் சென்றாா். வழிதெரியாமல் சாலையில் நின்றிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய, மகளிா் போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பாராட்டுக்களைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.