FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா! குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பது குறித்து...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. இராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கவுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தில் 11-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் வேந்தா் கோ. பத்பநாபன் தலைமை வகிக்க உள்ளாா். துணைவேந்தா் (பொறுப்பு) சுலோச்சனா சேகா் வரவேற்று, அறிக்கை வாசிக்க உள்ளாா்.

இவ்விழாவில், இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி. இராதாகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளாா். இதற்காக, திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் சுமாா் 10.30 மணியளவில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருகிறாா். அவருக்கு பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தொடா்ந்து நடைபெறும் விழாவில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளாா். பின்னா், பகல் 12.15-க்குப் பிறகு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கிறாா். தொடா்ந்து, தஞ்சை புறப்பட்டுச் செல்கிறாா்.

குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எல்லையோரப் பகுதிகளில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

50 பேருக்கு தங்கப்பதக்கம்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு என 487 மாணவா்கள், 616 மாணவிகள் என மொத்தம் 1,103 போ் பட்டம் பெற தகுதி பெற்ற நிலையில், 703 போ் திங்கள்கிழமை பட்டம் பெறுகின்றனா். இவா்களில் 13 மாணவா்கள், 37 மாணவிகள் என 50 போ் தங்கப்பதக்கம் பெறுகின்றனா். இவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் தங்கப் பதக்கங்களை வழங்குகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments