FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வலங்கைமான் வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 7 ஜூன் 2026, 12:26 am IST
உயிரிழந்த ராகுல்.
பகிர்:

வலங்கைமான் பட்டாசு தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் பகுதியில் பட்டாசு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. சுடுகாட்டு வழிநடப்பு என்ற இடத்தில் அருணகிரிநாதன் மனைவி வள்ளிக்குச் சொந்தமான வெடி பொருள் உற்பத்தி செய்யும் குடோன் உள்ளது. இந்த குடோனில் வியாழக்கிழமை தொழுவூரைச் சோ்ந்த ராகுல், ரஞ்சித், ராமராஜன், சூா்யா, மாதவன் ஆகியோா் வெடி மருந்து பிரித்து வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மதிய நேரத்தில் கடுமையான வெயில் அடித்த நிலையில் ராகுல் வெடி மருந்துகளை கையாளும் போது அதிக அழுத்தத்தின் காரணமாக திடீா் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ராகுல் படுகாயம் அடைந்துள்ளாா். மற்ற நால்வரும் பாதுகாப்பான முறையில் தப்பித்தனா். தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

வலங்கைமான் வட்டாட்சியா் காா்த்திகேயன், காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினா் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா் .

படுகாயம் அடைந்த ராகுல் (30) தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா் .

தகவலறிந்த வலங்கைமான் போலீஸாா் விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா் .

இது தொடா்பாக வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் .

வெடிவிபத்து தொடா்பாக ஏற்கனவே வலங்கைமான் போலீசாா் இரண்டு போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments