தூர்தர்ஷன் நிருபருக்கு மிரட்டல்
புது தில்லி, அக். 8: புது தில்லி அருகே உள்ள நிகாம்போத் கேட் பகுதியில் உள்ள மயானத்தில் சட்டவிரோத தகனம் நடைபெறுவதை படம் பிடிக்கச் சென்ற தூர்தர்ஷன் நிருபருக்கும் அவரது சக பணியாளருக்கும் மிரட்டல் விடுத்து
புது தில்லி, அக். 8: புது தில்லி அருகே உள்ள நிகாம்போத் கேட் பகுதியில் உள்ள மயானத்தில் சட்டவிரோத தகனம் நடைபெறுவதை படம் பிடிக்கச் சென்ற தூர்தர்ஷன் நிருபருக்கும் அவரது சக பணியாளருக்கும் மிரட்டல் விடுத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சிலர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நிகாம்போத் கேட் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பாக தகனம் நடைபெறுவது தொடர்பாக தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.
இது குறித்து செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் நிருபர், அவரது புகைப்படக் குழுவினர் சம்பந்தப்பட்ட மயான இடத்தில் படம் எடுத்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர். அப்போது, சிலர் அவர்களை வழிமறித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து தூர்தஷன் நிருபர் அக்விப் கான் கூறியதாவது:
""நாங்கள் புகைப்படம் எடுத்துவிட்டு வாகனத்துக்குள் ஏற முயன்றபோது சுமார் 24 பேர் எங்களை வழிமறித்து, மயானம் பற்றிய செய்தியை வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டினர். அச்செய்தி தொடர்பாக நான் வைத்திருந்த காகிதக்குறிப்பை ஒருவர் பறித்து கிழித்து எறிந்தார்'' என்றார். கேமரா குழுவினருடன் வந்திருந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மயான இடத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் இச் சம்பவம் நிகழ்ந்தது.
""நிகாம்போத் கேட் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத தகனம் குறித்து அறிவதற்காக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பல மனுக்களை பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாக ஒரு செய்திக்காக அண்மையில் தூர்தர்ஷன் நிறுவனத்தினர் என்னைத் தொடர்பு கொண்டனர். இதையடுத்து, நாங்கள் நிகாம்போத் கேட்டில் தகனம் நடைபெறும் பகுதிக்குச் சென்றுவிட்டு புறப்பட்டபோது எங்களை நோக்கி ஒரு கூட்டம் வருவதைக் கவனித்தேன். வரப்போகும் ஆபத்தை உணர்ந்து அங்கிருந்து நான் சென்றுவிட்டேன். ஆனால், அந்த கும்பல் தூர்தர்ஷன் குழுவினரைச் சூழ்ந்துகொண்டது'' என்றார் அவர். இது தொடர்பாக கஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் பின்னர் புகார் அளிக்கப்பட்டது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நிகாம்போத் கேட் பகுதியில் தகனத்திற்கு வந்த மக்களாக இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக அகர்வால் கூறினார். இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.