அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலாளரானார் விஜயதரணி
அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணிப் பொதுச் செயலாளராக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.
அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணிப் பொதுச் செயலாளராக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.
இது பற்றி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணிப் பொதுச் செயலாளராக விஜயதரணி எம்எல்ஏவை நியமிக்க வழங்கிய யோசனையை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக விஜயதரணி இருந்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் விஜயதரணிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இளங்கோவன் - விஜயதரணி ஆகியோர் தரப்பு பரஸ்பரம் குற்றம்சாட்டியது. இதன் தொடர்ச்சியாக விஜயதரணியை கட்சிப் பொறுப்பில் இருந்து கடந்த ஜனவரி 22-ஆம் தேதி காங்கிரஸ் மேலிடம் நீக்கியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரு தலைவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தில்லிக்கு அழைத்து கட்சிப் பணியில் ஒருங்கிணைந்து செயல்படும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் சட்டப்பேரவை பணிகளில் மட்டும் விஜயதரணி கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், அவரை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.
தலைமைக்கு நன்றி: இந்த நிலையில், நாடாளுமன்ற, சட்டப்பேரவை மகளிர் உறுப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விஜயதரணி வெள்ளிக்கிழமை மாலையில் தில்லி வந்தார். அப்போது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் விஜயதரணி கூறியதாவது: கட்சிக்கு உண்மையாக பணியாற்றினால் அதற்கான தகுதியை தலைமை வழங்கும் என்பதற்கு நானே உதாரணம். கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். எனக்கும் மாநிலத் தலைவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட போது நான் வேறு கட்சிக்கு மாறுவதாக வந்த செய்திகள் அனைத்தும் தவறு என்பதை தற்போதைய காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பு தெளிவுப்படுத்தி உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கட்சிப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.